6 December 2015

முன்வருவோமா??


வேகமாய்க் கொட்டு கொட்டியது மழை
வலியில் சிக்கிக்கிடக்கிறது தமிழகத்தின் தலை
தலைநகரம் தண்ணீரில் மிதக்கும் தனி நரகம்.
சென்னை.. இப்போது தண்ணீரில் மூழ்கிய திண்ணை.

கடலூர் மாவட்டத்திலும் வெள்ளம் ‍-அதைக்
கண்டுகொள்ளவில்லை நிறைய உள்ளம்.
கடலூர் தமிழத்தில் இல்லையா? சென்னை
மட்டுந்தான் தமிழகத்தின் பிள்ளையா?

ஏரியில் வீடுகட்டியதால் பாதி சென்னை
சின்னா பின்னம் ஆனது - ஐயகோ
எப்போதும்போல் கடலூர் மாவட்ட‌
வயலுக்குள் மழைத்தண்ணீர் போனது.

சேர்த்துவைத்த செல்வமெல்லாம் தண்ணீரில் விட்ட‌
சோகத்தில் சென்னை மக்கள்!
செல்வத்தோடு விளைந்த பயிரை இழந்த‌
சோகத்தில் கடலூர் மக்கள்!!

மக்கள் நிறையபேர் பொருட்க‌ளை மட்டும்
தொலைக்கவில்லை.. வாழ்வையும் சேர்த்துதான்..
ஓடி உதவுவோம் உடல் வேர்த்துதான்! கைகோர்த்துதான்!!

விமர்சனம், குற்றச்சாட்டு, உரையாடல் என‌
எல்லாவற்றையும் விட எல்லார்க்கும் உடனடித்தேவை
உணவு உடை தஞ்சம் - எல்லாரும்
உதவ‌ முன்வருவோமா கொஞ்சம்??



18 October 2015

குழப்பம்

நான் ஒரு மனநிலையில்
தொடங்கினேன் இந்த நாளை.
எதிர்பார்ப்பு மிகுந்த எனது காரியங்களில்
இன்னும் நாட்டம் வரவில்லை.
நாட்டம் தர நானும் எதையும் தரவில்லை.
காரியங்களின் முடிவுகள் வந்து
செல்கின்றன அச்சங்களாக
புதிய பயங்கள் வருகின்றன மிச்சங்களாக
"பன்றிக்கும் பன்னீருக்கும்" தொடர்பில்லாதது
போல உள்ளன என் செயல்கள்
தூங்குகின்றன ஓடவேண்டிய செயல்முயல்கள்
குழப்பமெல்லாம் முடிவிற்காக
கூடிவரும் விடிவிற்காக

12 April 2015

சீனியருக்கு டாட்டா

உங்களின் நான்கு ஆண்டுகள்
முடிந்தன கல்லூரி வாழ்க்கையாக!
நாங்களும் பிரியப் போகிறோம்
எங்களின் நல்ல உறவுகளை!
காட்டப் போகிறோம் டாட்டா
கஷ்டமாய் இருக்கும் நீங்க போய்ட்டா

ஈவன்ட்களில், ஃபங்ஷன்களில் கிடைத்த‌
நேரம் இன்னும் போதவில்லை
நம்மை ஒன்றாக்க நாட்களும்
வந்து அதிகம் சேரவில்லை
காட்டப் போகிறோம் டாட்டா
கஷ்டமாய் இருக்கும் நீங்க போய்ட்டா

காலேஜ் போனா கிளாஸ் கட்டு
ஹாஸ்டல் போனா கிரிக்கெட்டு
ஹோட்டல் போனா ஒரு வெட்டு
இருந்தாலும், காட்டப் போகிறோம் டாட்டா
கஷ்டமாய் இருக்கும் நீங்க போய்ட்டா

ஊர் சுற்ற ஓடினோம்
சினிமா பார்க்க ஓடினோம்
நீர் தந்த உறவினைப் பாடினோம்
உங்களைப் பிரிவதில் இங்கு வாடினோம்
இப்போது, காட்டப் போகிறோம் டாட்டா
கஷ்டமாய் இருக்கும் நீங்க போய்ட்டா

மீண்டும் சந்திக்கலாம் ஒருநாள்
நமக்கெல்லாம் அது திருநாள்
வாழ்வில் முன்னேற வாழ்த்துக்கள்
முடிவிலே, காட்டப் போகிறோம் டாட்டா
கஷ்டமாய் இருக்கும் நீங்க போய்ட்டா

11 April 2015

ஒரு அற்புதம்! ஒரு அதிர்ச்சி!!

ஒரு கவிதையை எழுத யோசித்தேன்.
என் எண்ண அலைகளை வாசித்தேன்.
எப்படி கவிதை வருமென மறுபடி யோசித்தேன்.
கடவுள் மனக் கதவை த‌ட்டுவாரோ இல்லை
கனவில் வந்து கொட்டுவாரோ என்று புரியவில்லை.
இல்லை பொருளை ஊடுருவி, உள்வாங்கி மனத்தின்
வசனங்களை பதிவு செய்வது கவிதை ஆகிறதோ?
ஒன்றும் செய்யாமல் எப்படி ஒன்றி வருகிறது கவிதை.
ஒன்றும் தராமல் எப்படி ஓடி வருகிறது கவிதை.
ஒரு அற்புதம். ஒரு அதிர்ச்சி. முடிவில் ஒரு கவிதை.


28 March 2015

கணினி பயனாளருக்கு ஒரு வேண்டுகோள்!!

உலகைக் கையிலடக்கி ஒளித்துவைத்து,
எண்ணற்ற மந்திரம் செய்யும் கணினி
கவனமாகப் பயன்படுத்தினால் உன்னை ஆக்கும்!
இல்லையேல் வாழ்விலிருந்தே உன்னை நீக்கும்!!
தவறு கணினியில் இல்லை.. கவனம் சிதறும் உன்
மனத்தில்.. தடுமாறும் அந்த தினத்தில்..
பயப்படாதே!! காத்துக்கொள் உன்னை!
தீமைக்குப் பலிகொடுத்து இழந்துவிடாதே உன்னை!!

14 February 2015

காதலர் தினம்

இது காதலைப் பற்றிய கவிதை.
காதலைப் பற்றியதால் எழுதியதன்று.
காதல் இதயத்தில் பிறந்து,
அறிவில் சிறந்து, உயிரில் வளர்ந்து,
உணர்வில் மிதக்கிறது;
அது உண்மையை மட்டுமே மதிக்கிறது.
அன்னையிடம் தொடங்கி அனைவரித்தும் படர்கிறது.
அது நெடும்பெரும் புதினமாய்த் தொடர்கிறது.
காதலே வாழ்க்கை இல்லை.
இருந்தும் பலருக்குக் காதலின்றி வாழ்க்கையே இல்லை.
வாழ்க்கைக்குக் காதல் சாபம் இல்லை.
வாழ்ந்துகாட்டினால் காதலுக்குப் பாவம் இல்லை.
பெருங்காதலுக்கு,
நறுங்காதலுக்கு, அன்பாலே வளரும் காதலுக்கு,
பிப்ரவரி 14 மட்டுமன்று.
அனுதினம் காதல்தினம் காதலர் தினம்.

21 January 2015

திருநாள்!!

நாட்டின் முன்னேற்றத்தை
நடைமுறைப்ப‌டுத்த எழுதிய
தீர்மான‌த்தின் அடையாளம்.

விடுதலை வாங்கிய இந்தியாவை
விழிவைக்க விதைத்த‌ விதையின் ஆரம்பம்.

சேறாக இருந்த நாட்டை வைத்து
மாமா நேரு, சிலையமைக்கக் கொடுத்த‌ வாய்ப்பு.

முற்றுகைக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து
முறையாக நாட்டை வழிந‌டத்த நினைவுகூறும் நாள்!

மன்னர்களிடம் இருந்த நாட்டை
மக்களிடம் தந்த நாள்!
மக்களிடம் ஆட்சி வந்த நாள்!!

குடியரசுத் திருநாள்!
குடியரசுத் திருநாள் வாழ்த்துக்கள்..

19 January 2015

உயிரும் வாகனமும்


மார்கழியின் குளிருக்கேற்ற முரட்டு வெயில்
தார்ச்சாலையில் வெளுத்து வாங்கியது.
சாலையில் வெவ்வேறு இரைச்சல்களுடன்
அத்தனை வாகனங்கள் அவ்வளவு வேகத்தில்.
நான் இருந்த வாகன‌மும் அப்படியே!!
ஒரு நேரத்தில் அனைத்து வாகனங்களும்
ஒரு இடத்தில் ஒதுங்கி, ஒதுங்கி சென்றன‌.
நான் நினைத்தது வாகனசக்தி தான் காரணம் என்று.

ஆனால், .,.,.!!!
அழகான குரங்கொன்று சாலையில்,
ஒழுகி படர்ந்த‌ ரத்தத்தில் இறந்து கிடந்தது
வேடிக்கை பார்ப்பவர்களின் மத்தியில்...!!
இதற்கும் வாகனசக்தி ஒன்றுதான் காரணம்.
வேடிக்கை பார்த்தவர்களில் நானும் ஒருவன்
என்பது கூடுதல் தகவ‌ல்....!!!